மும்பை : இந்திய கிரிக்கெட் அணி பழைய காலத்து டெக்னிக்கை பாலோ செய்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஓரளவாவது தாக்குப் பிடிக்க முடியும் என முன்னாள் தொடக்க வீரர் வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பேட்டிங் தெரிந்த பவுலர்கள் யாரும் இல்லை என்பதால் இந்திய அணி தங்களுடைய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய வசீம் ஜாபர் முதல் டி20 போட்டியில் இலக்கை துரத்தியும் இரண்டாவது போட்டியில் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் நமது பேட்டிங் சரியில்லாதது தான். தற்போது இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இல்லை. பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்களும் இல்லை. இதன் காரணமாக இந்திய அணி விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும்.
ஒரு காலத்தில் நம்மிடம் வெறும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ள நிலையில் நாம் முதலில் பவர் பிளேவில் முடிந்த அளவு நன்றாக விளையாடிவிட்டு, ஏழாவது ஓவரில் இருந்து 13 வது ஓவர் வரை சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்காமல் இருப்போம்.
கடைசி 5,6 ஓவர்களில் கைவசம் இருக்கும் விக்கெட்டை வைத்து அடித்து ரன்களை சேர்ப்போம். இந்த நிலையில் தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி பாலோ செய்ய வேண்டும். இதேபோன்று இஷான் கிஷன் டி20 கிரிக்கெட்டில் ரொம்ப தடுமாறி வருகிறார். இதனால் அவருக்கு பதில் ஜெய்ஸ்வாலை சேர்க்க வேண்டும்.
இசான் கிஷனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அவர் மீண்டும் டி20 போட்டியில் பலமான வீரராக வருவார் ஏற்கனவே சஞ்சு சாம்சன் அணியில் இருப்பதால் அவருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற வாய்ப்பை கொடுங்கள் என வசீம் ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணியில் ஏதேனும் ஒரு வீரர் நிலைத்து நின்று ஆடி 60 அல்லது 70 ரன்கள் அடிக்க வேண்டும் என்றும் அவரை சுற்றி மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும் என்றும் வசீம் ஜாபர் யோசனை கூறியுள்ளார்.