வாசிம் ஜாபருக்கு புது வேலை கிடைச்சிருக்கு.. என்ன வேலைன்னு தெரியுமா?
லக்னோ: உத்தரகாண்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக, மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வலம் வந்தவர் வாசிம் ஜாபர். ஜாபர் தலைமையில் மும்பை அணி 2 முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் ரஞ்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தமாகும்.

ரன் குவிப்பாளர்
ரஞ்சிப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர் ஜாபர். கடந்த மார்ச் மாதம் அவர் தனது ஓய்வை அறிவித்தார். மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக அவர் ரஞ்சிப் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். பயிற்சியாளராக இதுதான் அவரது முதல் பணியாகும்.

பயிற்சியாளர்
இதுகுறித்து ஜாபர் கூறுகையில், முதல் முறையாக ஒரு அணிக்கு நான் தலைமைப் பயிற்சியாளராகிறேன். இது சவாலானது. விளையாடிக் கொண்டிருந்த நான் இப்போது விளையாடப் போகிறவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். இதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். இது எனக்குப் புதிய அணி. அவர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர் என்றார்.

நல்ல அணி
2018-19 ரஞ்சிப் போட்டியில் காலிறுதி வரை விளையாடினர். அப்போது விதர்பாவை எதிர்த்து ஆடினர். அதன் பின்னர் அவர்கள் பின்னால் போய் விட்டார்கள். உத்தரகாண்ட் அணியினருடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக இருக்கும். இதை எதிர்பார்க்கிறேன் என்றார் ஜாபர். 42 வயதான ஜாபர் மும்பை, விதர்பாவில் ஆடிய காலத்திலேயே இளம் வீரர்களை நன்றாக ஊக்குவிப்பார்.

ஊக்குவிப்பது சந்தோஷம்
அப்போது அவர் செயலாற்றிய விதம்தான் இன்று அவரை பயிற்சியாளராக மாற்ற உதவியுள்ளது. உத்தரகாண்ட் அணியிலும் இளம் வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாசிம் ஜாபரின் அனுபவம் பெரிதும் பயன்படும் என்று நம்பப்படுகிறது. இளம் வீரர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பது எனக்கு பிடிக்கும். அதை பல வருடமாக சந்தோஷமாக செய்து வருகிறேன். அவர்கள் வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டும் என்று கூறுகிறார் ஜாபர்.
வாசிம் ஜாபர் இந்திய அணியில், 31 டெஸ்ட் போட்டிகள், 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதன் பின்னர் அவர் பெருமளவில் ரஞ்சிப் போட்டிகளில்தான் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications