
ஆசிய கோப்பை தொடர்
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. எனவே இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதற்காக மிகவும் பலமான ப்ளேயிங் 11-ஐ உருவாக்க நீண்ட ஆலோசனை நடைபெற்று வருகின்றன. ரசிகர்களும் தங்களது அலோசனைகளை கூறி வருகின்றனர்.

ஜாஃபரின் கருத்து
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ கணித்துள்ளார். இதில் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என வசீம் கூறியுள்ளார்.

பேட்டிங்கில் 5வது இடம்
இதுமட்டுமல்லாமல் ஒருவேளை ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றால், அவர் நம்பர் 5வது வீரராக தான் பேட்டிங்கிற்கு களமிறங்க வேண்டும் என்றும், ஹர்திக் பாண்ட்யா 6வது இடத்தில் விளையாட வேண்டும் என ஜாஃபர் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சில் 3 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ள வசீம் ஜாஃபர் அதில் பெரும் ட்விஸ்ட்-யும் கொடுத்துள்ளார்.

அஸ்வின் புறக்கணிப்பு
துபாய் பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, யுவேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னாய் என 4 ஸ்பின்னர்கள் உள்ளனர். இதில் ஜடேஜா மற்றும் யுவேந்திர சாஹல் முதன்மை வீரர்களாக தேர்வாகியுள்ளனர். 3வது ஸ்பின்னராக அனுபவ வீரர் அஸ்வினுக்கு மாற்றாக ரவி பிஷ்னாய் விளையாட வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

அஸ்வின் ஸ்பெஷல்
கடந்தாண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். பல்வேறு வேரியேஷன்களை வெளிகாட்டி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அப்படிப்பட்ட வீரரை ஜாஃபர் ஏன் தனது அணியில் சேர்க்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











