மும்பை : இந்திய அணியில் பல பிரச்சனைகளுக்கு இன்னும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் விமர்சித்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி அருகே இருந்து தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பேட்டிங் தெரியாமல் இருப்பதே என்று வசிம் ஜாபர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் டி20 கிரிக்கெட் என்பது அணியில் இருக்கும் 11 வீரர்களுக்குமே அதிரடியாக விளையாட தெரிந்து இருக்க வேண்டும். முதல் டி20 ஆட்டத்தில் 8வது இடத்தில் விளையாடிய குல்திப் யாதவுக்கு சிக்ஸரும் அடிக்க முடியாது. பவுண்டரியும் அடிக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை அந்த இடத்தில் சேர்த்தது தவறு. மேலும் குல்திப் மட்டுமல்ல,அந்த அணியில் எஞ்சி இருந்த நான்கு பேருக்கும் பேட்டிங் சுத்தமாக வராது.
அதில் ஆர்ஸ்தீப் இரண்டு பவுண்டரிகள் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது நிச்சயம் தவறான விஷயம். பேட்டிங் தெரிந்த பவுலர்கள் அணியில் இருந்திருந்தால் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஆனால் நாம் அணியை தவறாக தேர்வு செய்து இருக்கிறோம். இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டால் கடைசியில் களம் இறங்கும் வீரர் கூட பெரிய ஷாட் ஆடி அதிர்ச்சி அளிப்பார்கள்.

அப்படி ஒரு அணியை நாம் தேர்வு செய்ய வேண்டும். இந்திய அணியில் இந்த திட்டம் டி20 கிரிக்கெட்டுக்கு சுத்தமாக சரிவராது. இந்திய அணியில் பல கேள்விகளுக்கு இன்னும் விடையே இல்லை என்று வசிம் ஜாபர் கூறியுள்ளார். சர்துல் தாக்கூர், தீபக் சாஹர்,சிவம் மவி போன்ற வீரர்கள் எல்லாம் நன்றாக விளையாடக்கூடிய நிலையில் அவர்கள் இந்தத் தொடரில் சேர்க்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரில் வெறும் ஆறு பேட்ஸ்மேன்களை வைத்து விளையாடி வருகிறது. டாப் வரிசை வீரர்கள் கடைசிவரை நின்றால் மட்டுமே இந்திய அணியால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த முடியும்.