மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு விராட் கோலி நம்பர் நான்காவது வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி வந்தார். தற்போது கோலியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நம்பர் நான்காவது இடத்தில் யார் தான் பேட்டிங் செய்வார் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது அணியில் இருக்கும் சீனியர் வீரர் என்றால் அது ராகுலும், ரிஷப் பண்டும் தான். இந்த நிலையில் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், என்னை கேட்டால் கில்லை நம்பர் நான்காவது வீரராக களம் இறக்கலாம். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் தொடக்க வீரராக விளையாடுகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நான்காவது வீரராக களமிறங்கலாம். ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் பார்டர் கவாஸ்கர் தொடரில் தொடக்க வீரராக விளையாடி இருக்கிறார்கள்.
ராகுல் ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடி இருக்கிறார். எனவே அவரையும் திடீரென்று நாம் மாற்ற வேண்டும். இதேபோன்று சாய் சுதர்சனுக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதனால் அவருக்கு நீண்ட வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்ஷன் 1543 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 46 ரன்கள் ஆகும். இதில் ஒரு சதமும், 11 அரை சதமும் அடங்கும். எனினும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சாய் சுதர்சன் 49 இன்னிங்ஸ் விளையாடி 1957 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஏழு சதமும், ஐந்து அரை சதமும் அடங்கும். உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1396 ரன்கள் அடித்துள்ள சாய் சுதர்சன் ஆறு சதம் அடித்துள்ளார்.