கராச்சி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி பேசிக்கொண்டே நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகின்றனர்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

முதல் இன்னிங்ஸ் முடியவே 5 நாட்கள் ஆகிவிட்டதால் ராவல்பிண்டி ஆடுகளம் சர்ச்சையில் சிக்கியது. வேகப்பந்துவீச்சு எடுப்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, 2வது போட்டி கராச்சியில் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் கராச்சிக்கு வந்துள்ளனர். கராச்சியில் நட்சத்திர ஹோட்டலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்கு ஒரு காமெடி நிகழ்ந்துள்ளது. பயிற்சி முடித்துவிட்டு வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் லாபியில் நடந்து சென்றனர்.
அப்போது சக வீரர்களிடம் பேசிக்கிட்டே வந்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, கவனிக்காமல் நீச்சல் குளத்தில் விழுந்தார்.உடனடியாக அங்கிருந்த சக வீரர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். இதனையடுத்து, தனது செல்போனை அலெக்ஸ் கேரி, அங்கிருந்த வீரரிடம் கொடுத்து, நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறினார். இதில் அலெக்ஸ் கேரிக்கு காயம் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் அனைத்தையும் பாட் கம்மின்ஸ் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.