ஹைதராபாத்:ஐபிஎல் பைனலில் காயத்துடன் ரத்தம் வழிய, வழிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் காயத்துடன் விளையாடிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த போட்டியில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.

அவற்றில் ஒரு முக்கிய நிகழ்வு தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ஐபிஎல் பைனலில் சேசிங்கின் போது சென்னை வீரர் வாட்சன் ரத்தம் வழிய களத்தில் போராடி இருக்கிறார். அவர் அந்த போட்டியில் 80 ரன்கள் அடித்து கடைசி வரைப் போராடினார். ஆனால் எதிர்பாராத விதமாக, கடைசி 2 பந்துகள் மீதம் இருக்கையில் அவுட் ஆனார்.
அவர் முழங்காலில் காயத்துடன் விளையாடினார் என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். ரத்தம் வழிய அவர் காயத்துடன் விமானநிலையத்தில் தாங்கி தாங்கி செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது போட்டி முடிந்ததும் அனைத்து வீரர்களும் தங்களது ஊர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துக் கிளம்பினர்.
அப்போது ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வாட்சனின் முழங்காலில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. போட்டி முடிந்து அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டதாக தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங், வாட்சன் காயத்தை யாரிடமும் சொல்லாமல் விளையாடியதாக கூறியிருக்கிறார்.
மேலும் இதுதான் எங்கள் வாட்சன், அவர் நமக்காக விளையாண்டிருக்கிறார் என உணர்ச்சி பொங்கக் கூறியிருந்தார். அதன்பிறகுதான் ரசிகர்களுக்கும் அவர் காயத்தோடு விளையாடியது தெரியவந்தது.
வாட்சன் விளையாடிக் கொண்டிருக்கும்போது டைவ் அடித்து அவரது காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த காயத்தினை யாரிடமும் வெளியில் சொல்லாமல் ரத்தம் வர அவர் களத்தில் நின்ற படி சென்னையின் வெற்றிக்காக இறுதிவரை போராடினார் என்று ரசிகர்களும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி இருக்கின்றனர்.