டாக்கா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் இந்தியாவிடம் நேற்று வங்கதேசம் தோல்வி அடைந்தது. ஆனால் அம்பயர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்தியா-வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்தது. அதன் பின்னர் ஆடிய வங்கதேசம் அணியோ 193 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியை வங்கதேச ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. ஏனெனில் தங்கள் நாட்டு அணிக்கு எதிராக அம்பயர்கள் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் ரோகித் சர்மா 90 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த பந்தை நோபால் என்று அம்பயர் அறிவித்துவிட்டார். தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே அம்பயர் செய்த சதி என்பது வங்கதேசத்தினரின் குற்றச்சாட்டு.
அம்யர் இவான் கெளல்ட்டும் பாகிஸ்தான் அம்பயர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாக வங்கதேச ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக வங்கதேசம் முழுவதும் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தியா பணம் கொடுத்து அம்பயர்களை விலைக்கு வாங்கிவிட்டனர்; இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக ஐ.சி.சி.யே சதி செய்துவிட்டது என்பதும் வங்கதேச ரசிகர்களின் கொந்தளிப்பாகும்.
வங்கதேச நாட்டின் பெரும்பாலான ஊடகங்களும் வங்கதேசம் தோற்றது என்பதைவிட அம்பயர்களின் சதியைத்தான் தலைப்புச் செய்தியாக்கி வெளியிட்டுள்ளன.