வகாப் மாதிரி பந்து போடுறேன்னு, வாங்கி கட்டிக்காதீங்க... இந்திய பவுலர்களுக்கு ஸ்ரீநாத் அட்வைஸ்
சிட்னி: பாகிஸ்தானின் வகாப் ரியாஸ் போல பந்து வீசுகிறேன் என்று வம்பு செய்ய வேண்டாம் என்று இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் அறிவுறுத்தியுள்ளார்.
காலிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் வீசிய பவுன்சர்களும், பயன்படுத்திய சீண்டல் டெக்னிக்குகளும் வெகு பிரபலம். ஆனாலும், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வகாப் மாதிரி போடுங்க..
இந்திய பவுலர்களும், வகாப் ரியாஸ் போன்றே, ஆஸ்திரேலியாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறியிருந்தார்.

நகல் வேண்டாம்
இந்நிலையில், ஜவகல் ஸ்ரீநாத் கூறியதாவது: யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இந்திய பவுலர்கள் வகாப் ரியாசை பார்த்து காப்பியடிக்க வேண்டாம். இந்திய பவுலர்களின் பலம் என்னவோ, அதை மட்டுமே அரையிறுதியிலும் நிகழ்த்தி காண்பிக்க வேண்டும். அதைவிடுத்து, சிட்னி மைதானத்தை அடிலெய்டாக மாற்ற வேண்டாம்.

நமக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள்
இந்திய பவுலர்கள் தங்களது வேகம் மற்றும் பந்து வீசும் கோணத்தில் மட்டுமே கவனம் வைக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்-ஸ்டம்பு திசைக்கு வெளியே பந்தை பிட்ச் செய்து வீசுவது நல்ல பலனை தரும்.

எகிறி பந்து வேண்டாமே..
இதுவரை இந்திய பவுலர்கள் அதிகமாக பவுன்சர்களை போட்டு தாக்கிவந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிகமாக பவுன்சர் வீச வேண்டாம். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களை எளிதில் அடித்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆடுகளத்தை வைத்து நிர்ணயம்
அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருப்பதை போல மேலோட்டமாக தெரியலாம். ஆனால், உண்மையான ரிசல்ட் அன்றைய பிட்ச் நிலவரத்தை பொறுத்தே அமையும்.

முக்குச்சிக்காரன் டோணி
கேப்டன் டோணி, தனது பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். விக்கெட் கீப்பர் என்ற வகையில், பிட்ச்சை அவரால் சரியாக கவனிக்க முடிவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறு ஸ்ரீநாத் தெரிவித்தார்.

ஓட்டங்களை கொடுத்த ஸ்ரீநாத்
2003 உலக கோப்பை இறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங்கின் 140 ரன் உதவியுடன், 359 ரன்களை குவித்தது. அந்த போட்டியில் ஸ்ரீநாத், இந்திய பவுலர்களிலேயே முதல் முறையாக 10 ஓவர்களில் 87 ரன்களை வாரி வழங்கினார். இதுகுறித்து கேட்டபோது, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், சரியான அளவில் பந்து வீசியிருப்பேன் என்றார் சிரித்தபடியே.


Click it and Unblock the Notifications