அரட்டிய ஆப்கானிஸ்தான்.. போராடி வென்றது இலங்கை
டுனிடின்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில், இலங்கை அணி தட்டுத் தடுமாறி கடைசியில் ஒரு வழியாக வெற்றி பெற்றுத் தப்பிப் பிழைத்தது.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இன்று டுனிடின் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 233 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டுவதற்குள் இலங்கை அணி ஆடிப் போய் விட்டது. ஆப்கானிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர்கள் இலங்கையை மிரட்டி விட்டனர். இதனால் கடைசி 10 பந்துகள் மிச்சம் இருக்கும்போதும்தான் வெற்றி இலக்கைதக் தொட்டது இலங்கை.
இலங்கை அணியின் மஹளா ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி சதம் அடித்தார். முன்னதாக இலங்கை அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையிலிருந்து வெற்றிக் கோட்டுக்கு இலங்கையை, ஜெய்வர்த்தனேவும், கேப்டன் ஏஞ்சலா மேத்யூஸும்தான் கொண்டு சென்றனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் பேட்டிங்கின்போது அந்த அணியின் அஸ்கர் நாட்டிக்ஸாய் சிறப்பான அரை சதம் போட்டார். அவர் 54 ரன்களைக் குவித்தார். அவரும் சமியுல்லா ஷென்வாரியும் இணைந்து 88 ரன்களைக் குவித்தனர். ஷென்வாரி 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகம்மது நபி கடைசி நேரத்தில் 21 ரன்களைச் சேர்த்தார்.
இலங்கைத் தரப்பில் மலிங்கா, மேத்யூஸ் தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர். ஹெராத், திசரா பெரைரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தது. தற்போது 2வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications