ஐதராபாத்: இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், ஐதராபாத் மைதானத்தில் வெறும் 3 போட்டிகள் மட்டும் நடத்தவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஐசிசி நிர்வாகிகள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் வீரர்கள் சேவாக், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை அட்டவணையில் மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிலும் முதல் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகள் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் கடைசி நேரத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா மைதானங்களுக்கு அரையிறுதிப் போட்டிகள் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐதராபாத் மைதானத்திற்கு வெறும் 3 போட்டிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - குவாலிஃபையர் 1, பாகிஸ்தான் - குவாலிஃபையர் 2, நியூசிலாந்து - குவாலிஃபையர் 1 ஆகிய போட்டிகள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 போட்டிகள் என்றாலும், அதில் ஒரு போட்டியிலாவது இந்திய அணி விளையாடும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி ஐதராபாத் மைதானத்தில் மட்டும் விளையாடவில்லை. இது ஐதராபாத் ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஐதராபாத் மைதானத்தின் சீரமைப்புக்காக ரூ.117 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.