
41 வயதில் உலகக் கோப்பை
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு இன்று 41வது பிறந்த நாளாகும். 1975ம் ஆண்டு இதே நாளில்தான் முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் தொடங்கியது.

முதல் நாளில் 2 போட்டிகள்
முதல் உலகக் கோப்பைத் தொடரின் முதல் நாளன்று இரு போட்டிகள் நடந்தன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதின. எட்பாஸ்டனில் நடந்த போட்டியில் நியூசிலாந்தும், கிழக்கு ஆப்பிரிக்காவும் மோதின.

இந்தியா படு தோல்வி
இந்தியா - இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியாவின் முதல் உலகக் கோப்பைப் போட்டித் தோல்வி இது.

அப்போது 60 ஓவர்கள்
அப்போதைய ஒரு நாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தன. இதனால் காலையில் தொடங்கும் போட்டிகள் நீண்ட பல மணி நேரம் நீடிக்கும் நிலை இருந்தது.

19வது ஒரு நாள் போட்டி
இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்த அந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு சர்வதேச அளவில் வெறும் 18 ஒரு நாள் போட்டிகளே நடந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஸ்கரின் கட்டை வண்டி!
முதல் உலகக் கோப்பைப் போட்டியில் மிக மிக சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தின் நாயகன் கவாஸ்கர். தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கிய கவாஸ்கர் கட்டையைப் போட்டு ஆடியதால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பெரும் சோர்வடைந்து போயினர். விடாமல் ஆடிய கவாஸ்கர் மிக மிக நிதானமாக ரன் எடுத்தார். 174 பந்துகளைச் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.. ஆனால் எடுத்த ரன்களோ வெறும் 36 மட்டுமே!

இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் அதிரடி
மறுபக்கமோ இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டென்னிஸ் அமிஸ் 147 பந்துகளைச் சந்தித்து 137 ரன்களைக் குவித்து அசத்தியிருந்தார். அதற்கு நேர்மாறான ஆட்டத்தைக் கொடுத்தார் கவாஸ்கர்.

ஒரு பவுண்டரி மட்டுமே
கவாஸ்கர் தனது பேட்டிங்கின்போது ஒரே ஒரு பவுண்ரியை மட்டுமே வீசியிருந்தார். அவரது பேட்டிங் சராசரி 20.68 ஆகும். உலக அளவில் இன்று வரை இது சாதனையாக இருந்து வருகிறது.

132 ரன்கள் மட்டுமே!
இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களைக் குவித்திருந்தது. பின்னர் ஆடிய இந்தியா கவாஸ்கரின் கேவலமான பேட்டிங் காரணமாக 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கவாஸ்கர் "மச்சான்" பரவாயில்லை!
இந்திய அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான குண்டப்பா விஸ்வநாத், 59 பந்துகளைச் சந்தித்து 37 ரன்களை எடுத்திருந்தார். இவர் கவாஸ்கரின் மைத்துனர் ஆவார்.

கபில் கைக்கு கிரிக்கெட் போகும் வரை
1975ல் நடந்த முதல் தொடர் மட்டுமல்லாமல் 1979ல் நடந்த தொடரிலும் கூட இந்தியா முத்திரை பதிக்கவில்லை. பல வருட டெஸ்ட் அனுபவம் இந்தியாவிடம் இருந்தாலும் கூட ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு அது பழகி வரவில்லை. கபில் தேவ் 1983ம் ஆண்டு இந்திய அணிக்குத் தலைமை தாங்கி கலக்க ஆரம்பித்த பின்னர்தான் ஒரு நாள் போட்டிகளி்ல இந்தியாவின் ஆதிக்கமும் தொடங்கியது. 1983 கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி அட்டகாசமாக வென்றது நினைவிருக்கலாம்.

கவாஸ்கரை கொடுத்த அதே இந்தியாவில்தான்
அன்று கவாஸ்கர் அப்படி ஆடியதை இன்று வரை யாரும் மறக்க முடியாமல் உள்ளனர். அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகத்தான் சச்சின் போன்றோரும், விராத் கோஹ்லி, டிராவிட், கங்குலி, ஷேவாக், டோணி போன்றோரும் ரன்களைக் குவித்து அதிரடி ஆட்டக்காரர்களாக பெயர் வாங்கி, கவாஸ்கரால் கிடைத்த அவப் பெயரை துடைத்து இந்தியாவைப் பார்த்து பதட்டமடைய வைத்தனர் என்பது வரலாறு.


Click it and Unblock the Notifications











