பெங்களூரு : சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியை நேரில் காண, பல ஐடி கம்பெனிகளில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. இதற்கென சில கம்பெனிகளில் பெரிய புரஜக்டர் வைத்து தங்களது ஊழியர்களுக்கு உலகக்கோப்பை போட்டியை ஒளிபரப்பி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் உலகக்கோப்பை போட்டிகள் ஜூரம் பரவிக் கிடக்கிறது. அதிலும், தொடர்ந்து போட்டிகளில் ஜெயித்து வருவதால், இந்தியா நிச்சயம் உலகக்கோப்பையை வென்று வரும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. எனவே, இந்திய அணி விளையாடும் நாட்களில் ரோடுகள், பூங்காக்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை வெறிச்சோடிக் கிடப்பதைக் காணமுடிகிறது.

ஆனால், தவிர்க்கவே முடியாத காரணங்களால் விடுமுறை எடுக்க இயலாமல் ஆபிசுக்கு செல்லும் கிரிக்கெட் பிரியர்களுக்கு வேலையில் மனம் ஒப்புவதில்லை. அவர்கள் மனம் முழுவதும் கிரிக்கெட் போட்டியிலேயே உள்ளது. இதனால், அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலை உண்டாகிறது.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்த படியே இன்றைய உலகக்கோப்பை போட்டியை காண ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
சில அலுவலங்களில் இன்று நடைபெற இருந்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்களைக் கூட நேற்றே நடத்தி முடித்து விட்டார்களாம்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், சில அலுவலகங்களில் போட்டியைக் கண்டு களிக்கும் ஊழியர்களுக்கு இடையிடையே உணவுப் பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்தப் பிரச்சினையே வேண்டாம் என பெங்களூருவில் சில அலுவலங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே நிம்மதியாக இந்திய ஆட்டத்தைக் கண்டு களிக்க வசதியாக இன்று விடுமுறை அறிவித்து விட்டன.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட ஜோக்குகள் உலா வந்த வண்ணம் உள்ளன. அதில் ஒரு சின்ன சாம்பிள் ஜோக் உங்களுக்காக :
ஊழியர் ஒருவர் கிரிக்கெட் பார்ப்பதற்காக லீவு கேட்டு விண்ணப்பிக்கிறார். தனது லீவிற்கான காரணமாக பொய் ஏதும் கூற விரும்பாத அவர், 'எனது தேச பக்தியைக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே நாளை எனக்கு விடுமுறை வேண்டும்' என விண்ணப்பிக்கிறார்.
இதற்கு மானேஜரின் மெயிலில் இருந்து ஆட்டோ ரிப்ளை வருகிறது. அதில், 'நான் நாளை விடுமுறை. எனவே, உங்களது கோரிக்கை குறித்து தாமதமாக பரிசீலிக்கப் படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாகப் பட்டது, ஊழியருக்கு முன்னாடியே தனது தேசபக்தியைக் காட்ட போய் விட்டார் மானேஜர்.