பிர்மிங்காம்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் 2024 டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இன்று (ஜூலை 13) இரவு 9 மணிக்கு துவங்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ஷாஹித் அப்ரிடி, யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் போன்றோர் பங்கேற்க இருக்கும் இந்த போட்டி மழையால் ரத்தாகுமா? என்ற சந்தேகம் இருந்துள்ளது.
இந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது இந்தியா தனது இன்னிங்சை ஆடி முடித்திருந்தது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவர்கள் ஆடிய நிலையில் மழை பெய்தது. பின்னர் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது, அதே போல, இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதும் போட்டியின் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், மழையால் முழுமையாக போட்டி ரத்து ஆக வாய்ப்பு இல்லை.
இந்த போட்டி குறித்த வானிலை அறிக்கையின்படி போட்டி நேரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பிருந்து போட்டி முடியும் வரை 40 சதவீதம் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, போட்டி முழுமையாக மழையால் ரத்தாக வாய்ப்பு இல்லை.
அதே சமயம், மழையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் குறைந்த பட்சம் இரண்டு அணிகளும் ஐந்து ஓவர்கள் ஆடியிருந்தால் டிஎல்எஸ் முறைப்படி போட்டி முடிவு அறிவிக்கப்படும். ஒரு வேளை முதலில் பேட்டிங் செய்யும் அணி 20 ஓவர்களும் ஆடி முடித்த பின், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 5 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்தால் டிஎல்எஸ் முறைப்படி முடிவு வெளியிடப்படும். எனவே, இந்த போட்டியில் அவ்வாறான முடிவு எட்டப்பட அதிக வாய்ப்பு உள்ளது.