பிர்மிங்காம்: 2024 உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்கள் இடம் பெற்று இருந்த இந்த இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அணியில் இடம்பெற்று யுவராஜ் சிங், தற்போது இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
அவர் பாகிஸ்தான் அணியை கேப்டனாக வீழ்த்திக் காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எகிறி இருந்தது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 156 ரன்கள் சேர்த்தது. அடுத்த இந்தியா சாம்பியன்ஸ் சேஸிங் செய்தது. அப்போது அம்பத்திராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இருந்தார். குர்கீரத் சிங் 33 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஐந்தாம் வரிசையில் இறங்கிய யுவராஜ் சிங் மிகவும் நிதானமாக ஆடினார். அவரால் பந்துகளை சரியாக அடிக்க முடியவில்லை. திணறல் ஆட்டத்தை ஆடி வந்தார். இந்திய அணி 4 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் யூசுப் பதான் ஆறாம் வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினார். அதன் மூலம், யுவராஜ் சிங்கின் திணறல் ஆட்டத்திற்கு அவர் ஈடு கொடுத்தார்.
யுவராஜ் சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் 70-க்கும் கீழே இருந்தது. அப்போது கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியா அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார் யூசுப் பதான். அதற்கு அடுத்த பந்தில், சரியாக வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவை என்ற நிலையில், அவர் ஆட்டம் இழந்தார். பின்னர் அவரது சகோதரர் இர்பான் பதான் களத்துக்கு வந்தார்.
19வது ஓவரின் முடிவில் இந்திய அணி 155 ரன்களை எட்டியது. கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இர்பான் பதான் 20 வது ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். யுவராஜ் சிங் 22 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 68 ஆக இருந்தது. யூசுப் பதான் 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.50 ஆகும்.
கடைசி ஓவர்களில் யுவராஜ் சிங் தடுமாறிய நிலையில், பதான் சகோதரர்கள் அபாரமாக பேட்டிங் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இர்பான் பதான் பந்து வீச்சின் போது அபாரமாக செயல்பட்டார். அவர் மூன்று ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றிக்கு பதான் சகோதரர்களும் முக்கியமான காரணமாக இருந்தனர்.