லெய்செஸ்டர்: 2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) கிரிக்கெட் தொடர், மீண்டும் ஒருமுறை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் வீசிய 18 பந்துகள் கொண்ட ஒரு ஓவர், போட்டி பிக்சிங் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளது. என்ன நடந்தது? என்று பார்க்கலாம்.
லெய்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தானின் சயீத் அஜ்மலின் சுழலில் சிக்கி, 11.5 ஓவர்களில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது. அஜ்மல் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ், 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, ஆஸ்திரேலிய கேப்டன் பிரெட் லீ, 8-வது ஓவரை வீச ஜான் ஹேஸ்டிங்ஸை அழைத்தார்.
ஆனால், அந்த ஓவரில் நடந்ததுதான் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹேஸ்டிங்ஸ் அந்த ஒரு ஓவரை முடிக்க, மொத்தம் 18 பந்துகளை வீசினார். இதில் 12 வைடுகள் மற்றும் ஒரு நோ-பால் அடங்கும். அவர் வீசிய முதல் 5 பந்துகளுமே வைடுகளாக அமைந்தன. பின்னர் இரண்டு சரியான பந்துகளை வீசிய அவர், மீண்டும் ஒரு நோ-பால் மற்றும் ஒரு வைடை வீசினார். முடிவில், பாகிஸ்தான் அணி அந்த ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடிய, அனுபவம் வாய்ந்த 39 வயதான ஹேஸ்டிங்ஸ், இவ்வாறு பந்துவீசியது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்தப் போட்டியின் முடிவு எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனாலும், ஒரு பந்துவீச்சாளர் தன் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்து இவ்வளவு வைடுகளை வீசியது, இது போட்டி பிக்சிங்காக இருக்கலாம் என ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அழுத்தங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியதால், அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது WCL தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது 10 நாட்களுக்குள் இந்த இரண்டாவது பெரிய சர்ச்சை, தொடரின் நம்பகத்தன்மை மீது தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது ஒரு லெஜண்ட்ஸ் போட்டி என்பதால், இந்த 18 பந்து ஓவர் கிரிக்கெட் வரலாற்றின் மிக நீண்ட ஓவராக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாது. இருப்பினும், ஒரு தொழில்முறை போட்டியாக இருந்திருந்தால், இது கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட ஓவராக இருந்திருக்கும். இந்த வினோதமான நிகழ்வு, ஓய்வுபெற்ற வீரர்களின் போட்டிகளின் நேர்மை குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.