பர்மிங்காம்: 2025 வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில் பங்கேற்ற இந்திய சாம்பியன்ஸ் அணி வீரர்கள் "எங்களுக்கு நாடுதான் முதலில், மற்றதெல்லாம் அப்புறம்தான்" என்ற முடிவோடு பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இருந்து விலகினர்.
வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் தகுதி பெற்றிருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். முன்னதாக, லீக் சுற்றிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என இந்திய வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் விளையாடவில்லை. எங்களுக்கு எப்போதுமே எங்கள் நாடும் தேசமும்தான் முதன்மையானது. இந்தியக் கொடியை எங்கள் சட்டையில் அணிவதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம், அதை சம்பாதித்திருக்கிறோம். என்ன ஆனாலும் சரி, எங்கள் நாட்டை நாங்கள் ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம். ஒருவேளை நாங்கள் இறுதிப் போட்டிக்குச் சென்று அங்கு பாகிஸ்தானைச் சந்தித்திருந்தாலும், இதே முடிவைத்தான் எடுத்திருப்போம். நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்" என்று பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் இந்த முடிவை மதிப்பதாக WCL தொடர் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "விளையாட்டின் மூலம் உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். இந்திய சாம்பியன்ஸ் அணியின் விலகல் முடிவை நாங்கள் மதிக்கிறோம்."
"அதேபோல், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியின் போட்டி மனப்பான்மையையும் மதிக்கிறோம். அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த விலகலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் சந்திக்கும்.