பிர்மிங்காம்: "பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றாகப் பயணிக்க முடியாது" என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) அரையிறுதிப் போட்டியில் விளையாட இந்திய சாம்பியன்ஸ் அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக இங்கிலாந்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில், இந்திய சாம்பியன்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை வெறும் 13.2 ஓவர்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருந்தது. ஆனால், பரம எதிரியான பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்பதில்லை என்ற தங்களது நிலைப்பாட்டில் இந்திய வீரர்கள் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்" என்று முக்கிய செய்தி நிறுவனங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான லீக் ஆட்டமும் இந்திய வீரர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போட்டியின் முக்கிய ஸ்பான்சரின் நிலைப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தொடரின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றான 'ஈஸ்மைட்ரிப்' (EaseMyTrip) நிறுவனம், இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கான ஆதரவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சாம்பியன்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு எங்கள் பாராட்டுகள். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி என்பது மற்றொரு சாதாரண ஆட்டம் அல்ல. பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடனான உறவை இயல்பாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிகழ்வையும் நாங்கள் ஆதரிக்க முடியாது. சில விஷயங்கள் விளையாட்டை விடப் பெரியவை. முதலில் தேசம், பிறகுதான் வியாபாரம், எப்போதுமே" என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரசியல் பதட்டங்கள் காரணமாக, இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரிலும் இந்திய வீரர்கள் தங்களது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.