லண்டன்: உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா சாம்பியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியுடன் மோதவிருப்பது பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 31 அன்று நடைபெறவிருந்த இந்தப் போட்டி, இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பதற்றங்கள் காரணமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அந்த தொடரின் விளம்பரதாரர் ஒருவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தாங்கள் விளம்பரம் அளிப்பதில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்து உள்ளார்.
இந்த தொடரின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த 'ஈஸ் மை ட்ரிப்' (EaseMyTrip) நிறுவனம், இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு தங்கள் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவில், "பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒருபோதும் கைகோர்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடனான உறவை இயல்பாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிகழ்வையும் நாங்கள் ஆதரிக்க முடியாது. தேசத்திற்கே எங்கள் முதல் முன்னுரிமை, வியாபாரம் அதன் பிறகுதான்" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, வணிக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல, மாறாக தேசத்தின் மனசாட்சியைப் பிரதிபலிப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய வீரர்கள் புறக்கணித்திருந்தனர். தற்போது அரையிறுதியிலும் பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதிலளித்த தவான், "தவறான நேரத்தில் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். நான் முன்பும் பாகிஸ்தானுடன் விளையாடவில்லை, இப்பொழுதும் விளையாட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
லீக் சுற்றில் தொடர் தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோத வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், இந்திய வீரர்கள் மீண்டும் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. லீக் சுற்றைப் போலவே இந்தப் போட்டியும் ரத்து செய்யப்படுமா அல்லது இந்திய அணி விலகினால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா என்பது குறித்து தொடர் அமைப்பாளர்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.