லண்டன்: 2025 வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
சர்வதேச தொடராக இல்லாவிட்டாலும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியுடன் ஆட மறுத்தது பாகிஸ்தான் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதி, இனி தனியார் கிரிக்கெட் தொடர்களில் 'பாகிஸ்தான்' என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் "வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) 2025" கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முன்னாள் வீரர்கள் அடங்கிய அணிகள் பங்கேற்றன.
இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதவிருந்தன. அண்மையில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான விளையாட்டு உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த சம்பவத்திற்கு பிறகு இதுவரை இந்தியா - பாகிஸ்தான் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் மோதவில்லை. .
இந்த நிலையில் 2025 வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். முன்னதாக, லீக் சுற்றிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இரண்டு முறை பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது, தங்கள் நாட்டிற்கு அவமானம் என பாகிஸ்தான் கருதுகிறது. இந்தச் சம்பவத்தால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கருதுகிறது.
இதனையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இனிவரும் காலங்களில் தனியார் அமைப்புகள் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் 'பாகிஸ்தான்' என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பெயரைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிபி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பிசிபி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த முடிவு வாரியத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது. வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில் இந்திய வீரர்கள் இரண்டு முறை பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது நாட்டின் பெயருக்கு இழுக்கு என்று உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்." என்று தெரிவித்தன.
மேலும், பாகிஸ்தான் அரசின் விளையாட்டு அமைச்சகமும், இனிவரும் காலங்களில் தனியார் லீக்குகளில் நாட்டின் பெயர் பயன்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு பிசிபிக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.