லக்னோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் எங்களின் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என்று அத்தனையிலும் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தியதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிகக அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து தென்னாப்பிரிக்கா அணி அசத்தியுள்ளது. 48 வருட உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் முதல்முறையாக தோல்வியடைந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேசுகையில், 311 ரன்கள் இலக்கு என்பது கொஞ்சம் சவாலான இலக்காகவே கருதுகிறேன். அதேபோல் டாஸை தோற்றதும் நல்லதுக்கு தான். ஏனென்றால் நாங்களும் சேஸிங் செய்யலாம் என்றே முடிவு செய்தோம். எனக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், டி காக் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்.
அதனை பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல் எங்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை என்று சொன்னால் பொய்யாக இருக்கும். இந்த போட்டியில் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நிச்சயம் ஆதிக்கம் செலுத்தினோம் என்றே கூற வேண்டும். நிச்சயம் பேட்ஸ்மேன்களை பாராட்ட வேண்டும் என்றாலும், பவுலர்கள் மிரட்டலாக செயல்பட்டனர்.
இங்கிடி புதிய பந்தில் சிறப்பாக செயல்படவும், ரபாடா விக்கெட் வீழ்த்த பந்துவீசுவதையும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். அண்மை காலங்களில் வெற்றிக்கான குணத்தையும், கடைசி வரை போராடும் தன்மையையும் பற்றி தான் அதிகமாக பேசி இருக்கிறோம். மேலும், இந்த போட்டியில் இருந்து நம்பிக்கையும், சில கற்றல்களையும் எடுத்து கொண்டு அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.