ஐதராபாத்: ஐதராபாத் பிரியாணியை ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதால் வீரர்கள் கொஞ்சம் மந்தமாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷதாப் கான் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வந்திருக்கிறது பாகிஸ்தான் அணி. உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் வகையில் கடந்த சில நாட்களாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பாகிஸ்தான் அணி ஐதராபாத் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாடியது. இந்த இரு பயிற்சி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை பெற்றுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் செயல்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களுக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் ஃபகர் ஜமான் 22 ரன்களிலும், இமாம் உல் ஹக் 16 ரன்களிலும், அப்துல்லா ஷஃபிக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக வேறு வழியின்றி பாபர் அசாம் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு பயிற்சி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருப்பதால், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அந்த அணியால் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷதாப் கான் கூறியுள்ள கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய ஆட்டத்திற்கு பின் ஷதாப் கான் பேசுகையில், ஐதராபாத் வந்தது முதல் ஒவ்வொரு நாளும் பிரியாணியை சாப்பிடுகிறோம். அதன் காரணமாக மந்தமாக இருக்கிறோம் ஜாலியாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசுகையில், பயிற்சி ஆட்டங்களில் எங்களுக்கு முடிவை பற்றி கவலையில்லை. இந்த பயிற்சி போட்டிகள் மூலமாக எங்கள் அணிக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. இரு போட்டிகளிலுமே வெற்றிக்காக போராடினோம்.
எங்களின் பிளேயிங் லெவனையும் இறுதி செய்ய முடிந்துள்ளது. அதேபோல் பெஞ்சில் இருந்த வீரர்களுக்கும் தங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுடன் விளையாடும் போது வீரர்களின் மன உறுதி அதிகரிக்கும். அதேபோல் ஐதராபாத் ஆடுகளம் மற்றும் சூழல் எங்களுக்கு பழக்கமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.