கராச்சி: உலகின் எந்த மைதானத்திலும் எந்த அணியையும் எதிர்த்து விளையாட தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 1.32 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை என்று தெரிய வந்தது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள ஆட்டத்தின் மைதானத்தை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், உலகக்கோப்பைத் தொடரை விளையாடுவதற்காக நிச்சயம் இந்தியா செல்வோம் என்றே நினைக்கிறேன். அதேபோல் இந்தியா அணிக்கு எதிராக மட்டும் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்திய அணியை தவிர்த்து 8 அணிகளுடன் விளையாட உள்ளோம். அவர்களையும் வீழ்த்தினால் மட்டுமே எங்களால் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் எங்களின் கவனம் இல்லை.
அதேபோல் கிரிக்கெட் அணியாக நாங்கள் எந்த சவாலுக்கும் தயாராக இருக்க வேண்டும். உலகக்கோப்பைத் தொடர் எங்கு நடந்தாலும், அங்கு சிறப்பாக விளையாட விரும்புகிறோம். அனைத்து நாடுகளிலும் திறம்பட விளையாட ஆசைப்படுகிறோம். வெவ்வேறு அணிகளுக்கு எதிராக வெவ்வேறு சூழல்களில் விளையாட தயாராக இருக்கிறோம். அதேபோல் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அனைத்து நாடுகளிலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் இந்தியா அணி மட்டும் எங்களின் கவனத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.