கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரில் வழக்கமாக செயல்படும் வங்கதேச அணியை போல் நாங்கள் இல்லை என்று கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளது. இன்று நடைபெற்ற நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 68 ரன்களையும், பரேஸி 41 ரன்களையும் சேர்த்தனர்.

வங்கதேச அணி தரப்பில் சொரிஃபில் இஸ்லாம், டஸ்கின் அஹ்மத், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 42.2 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. நெதர்லாந்து அணி தரப்பில் பால் மீக்கெரென் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் நெதர்லாந்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், நாங்கள் சிறப்பாக பந்துவீசியதாக நினைத்தேன். ஆனால் 160 முதல் 170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் இந்த தொடர் முழுக்கவே சொதப்பலாக விளையாடி வருகிறோம்.

ஒவ்வொரு போட்டியிலும் மோசமாகி கொண்டே போகிறது. இங்கிருந்து அரையிறுதிக்கு முன்னேறுவதெல்லாம் கடினமான ஒன்றாகும். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் மோசமாகவே விளையாடி வருகிறோம். வீரர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள், தோல்விக்கு பின் மனதில் என்ன ஓடுகிறது என்பது தெரியவில்லை. எங்களின் ஆட்டம் வங்கதேச அணியை போலவே இல்லை. ஆனால் ஏற்ற, இறக்கங்களில் வங்கதேச அணி ரசிகர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.