ஃபுளோரிடா: இந்திய அணியின் ஸ்பின்னர்களை விளாச தவறியதே எங்களின் தோல்விக்கு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் பாவெல் ஆகியோர் 2 ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஓவர்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதேபோல் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் அக்சர் படேல் மூவரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிலும் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை தட்டி தூக்கினார். இந்திய ஸ்பின்னர்களின் தாக்குதலாலேயே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறி போயினர். கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவித்தனர். இதுவே அந்த அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
இந்த தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் கூறுகையில், ஃபுளோரிடா ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமானதாக இருக்கும். நாங்கள் 10ல் இருந்து 15 ரன்கள் வரை குறைவாக சேர்த்திருக்கிறோம். எங்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும், திட்டத்திற்கு ஏற்ப செயல்படவில்லை. தரமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசும் போது சில நேரங்களில் அழுத்தம் அதிகரிக்கும்.
இந்த டி20 தொடர் தொடங்கியதில் இருந்து நான் சொல்லி வருகிறேன். இந்திய அணியின் ஸ்பின்னர்களை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வைத்தே தொடரின் முடிவு இருக்கும் என்று. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிவிட்டோம். இரு அணிகளுமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதன் காரணமாகவே ஆட்டம் 2-2 என்ற நிலையில் உள்ளது. இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெல்வோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.