சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சென்னை அணி வீரர்கள் கேப்டன் தோனி தலைமையில் மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். காலில் ஏற்பட்ட காயத்தை கூட பொருட்படுத்தாமல் தோனி மைதானத்தில் வலம் வந்து சில பரிசுகளையும் ரசிகர்களுக்கு அளித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் தோனியின் ஆட்டோகிராஃப் வாங்கினார். இதனால் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசனோ என்ற ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தோனிக்கு எந்த வார்த்தையையும் பேசவில்லை. டேனி மாரிஸன் கடைசி ஐபிஎல் சீசன் என்று சொன்னபோது, அப்படி நான் சொல்லவில்லை என்றே கூறி வந்தார்.
இதனால் 41 வயதாகும் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவாரா, மாட்டாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனி ஓய்வை அறிவித்தால், அடுத்த சிஎஸ்கே கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் எம்எஸ் தோனி ஓய்வு பற்றிய கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

அதில் காசி விஸ்வநாதன் கூறுகையில், அடுத்த சீசனிலும் சென்னை கேப்டன் தோனி களமிறங்குவார் என்ற நம்புகிறோம். அதேபோல் ரசிகர்களும் இதேபோன்று சென்னை அணிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். காசி விஸ்வநாதனின் வார்த்தைகள் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.