ட்ரினிடாட்: இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணிய 28 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடியாக ஆடி விரைந்து வெற்றிபெற வேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சூர்யகுமார் யாதவ் 21 ரன்களும், சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா - சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக ஆடினாலும், ஒரே ஓவரில் இருவரும் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து டெய்லண்டர்களும் விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இருப்பினும் திலக் வர்மாவின் ஆட்டமும், அணுகுமுறையும் ரசிகர்களிடையே சுரேஷ் ரெய்னாவை நினைவுபடுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் தனது பேட்டிங் ஸ்டைலை கைவிடாமல் ஆடும் திலக் வர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதில் களமிறங்கிய உடனே 2 சிக்சர்களை விளாசி மிரட்டினார்.
இந்த நிலையில் திலக் வர்மாவின் ஆட்டம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், திலக் வர்மாவின் ஆட்டத்தை ஓய்வறையில் இருந்து காண்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. தனது முதல் சர்வதேச ரன்களை இரு சிக்சர்களுடன் தொடங்கியுள்ளார். அவர் மன உறுதியுடன் விளையாடுவது அவரது பேட்டிங்கிலேயே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் எந்த பவுலருக்கு எதிராகவும் அச்சமில்லாமல் விளையாடுகிறார். இந்திய அணிக்காக திலக் வர்மா பல்வேறு சாதனைகளை படைப்பார் என்று தெரிவித்துள்ளார்.