மும்பை: செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் துலீப் டிராபி தொடர் தொடங்கவுள்ளது. முதல் சுற்றில் பங்கேற்கவுள்ள 4 அணிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 4 பேரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கேஎல் ராகுல், ஜடேஜா, அக்சர் படேல் உள்ளிட்டோருக்கு கேப்டன்சி மறுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர், ரஞ்சி டிராபி தொடர், சையத் முஷ்டாக் அலி, யு19 கிரிக்கெட் என்று அத்தனை தொடர்களிலும் சிறப்பாக ஆடிய பலருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சச்சின் பேபி உள்ளிட்டோருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதேபோல் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு மட்டும் பிசிசிஐ ஸ்பெஷலாக வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களை துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
ஏனென்றால் சீனியர் வீரர்கள் காயமடைந்தால் அவர்களின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி வரும் வீரர்கள் யாரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். நாமும் இந்திய வீரர்களை அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் உள்ளூர் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளனர். தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர், பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், இந்திய வீரர்கள் கட்டாயமாக உள்ளூர் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் தீவிரமாக அறிவுறுத்தினர்.
இதன் வெளிப்பாடாக சுப்மன் கில், கேஎல் ராகுல் தொடங்கி இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பும் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எந்த வீரருக்கு காயம் ஏற்பட்டாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.