காஷ்மீர் வேண்டாம்.. கோலியை கொடுங்க… பாகிஸ்தான் இளைஞர்கள் திடீர் போராட்டம்.. எதற்கு?
ஸ்ரீநகர்: காஷ்மீர் வேண்டாம், கோலியை கொடுங்கள் என்று பாகிஸ்தான் இளைஞர்கள் போராடுவது போல, இணையத்தில் டுவிட்டர் வைரலாகி இருக்கிறது.
உலகளவில் ஒரே ஒரு போட்டி தான் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டது. பேசப் படுகிறது... பேசப்பட்டு கொண்டே இருக்கும். அது.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி தான். இந்த இரு நாடுகளிடையேயான போட்டி, எப்போதுமே வெறும் விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை.
மாறாக காஷ்மீர் பிரச்னை என்பதால், அரசியல் அழுத்தங்களையும் தாண்டி சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது. இந்த உலக கோப்பையிலும், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியிலும் அதன் தாக்கம் வழக்கம் போல பெருத்த எதிர்பார்ப்புடன் இருந்தது.

ரசிகர்கள் கொந்தளிப்பு
இந்தியாவுடன் தோற்று, இன்னமும் வசை வாங்கி கொண்டிருக்கிறார்கள் பாக். அணியினர். ரசிகர்களின் கொந்தளிப்பும் இன்னமும் அடங்கவில்லை. ஆனால்.. காஷ்மீர் விவகாரத்தை முன் வைத்து டுவிட்டரில் ஒரு படம் தாறுமாறாக வைரலாகி கொண்டிருக்கிறது.

கோலியை கொடுங்கள்
அந்த டுவிட்டரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்' என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது இந்த வாசகம் அடங்கிய பதாகையை இளைஞர்கள் வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் இளைஞர்கள் போராடுவது போன்ற ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் ரீ ட்வீட் செய்து வந்தனர்.
2016ம் ஆண்டு புகைப்படம்
இந்நிலையில் அந்த புகைப்படம் போலியான படம் என்று தெரியவந்துள்ளது. அதாவது அந்த புகைப்படம், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான பிரபல இதழ் ஒன்றின் கட்டுரையில் இடம்பெற்ற போட்டோ என்பது தெரியவந்துள்ளது.

புர்ஹான் வானி மரணம்
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வானியின் மரணத்தை தொடர்ந்து, காஷ்மீர் இளைஞர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வார்த்தைகளை வடித்து முழக்கமிட்ட போது எடுத்த புகைப்படமாகும்.

ஒட்டுவேலை புகைப்படம்
அதனை தற்போது ஒட்டுவேலை செய்திருக்கும் நெட்டிசன்கள், சமூக வலை தளங்களில் உலவ விட்டிருக்கின்றனர். இதே போல் பல்வேறு போட்டிகளின் போதும் ஹர்திக் பாண்டியா, தோனி ஆகியோரை வைத்து பேனர் வைரலானது குறிப்பிடத் தக்கது.


Click it and Unblock the Notifications