பெங்களூரு: ஒரு ரன் கொடுக்க வேண்டிய இடத்தில் நான்கு ரன்களை கொடுக்கிறோம். பீல்டிங் மிகவும் மோசம். இப்படியெல்லாம் விளையாடினால் நாம எப்படி ஜெயிக்க முடியும் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரக்தியுடன் குறிப்பிட்டார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. நேற்று நடந்த சீசனின் 29வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் பெங்களூரு மோதியது.

முதலில் ஒடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி, 5ல் தோல்வியுடன் புள்ளிப்பட்டியில் 7வது இடத்தில் பெங்களூர் அணி உள்ளது.
அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலையில் பெங்களூர் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்றார்.
ஒரு ரன் கொடுக்க வேண்டிய இடத்தில், நான்கு ரன்களை தாராளமாக வழங்கியுள்ளோம். பீல்டிங் மிக மிக மோசம். இப்படி எல்லாம் விளையாடினால் எப்படி ஜெயிக்க முடியும் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இந்திய அணியை நடத்தி வரும் கோஹ்லிக்கு, ஐபிஎல் போட்டியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த விரக்தியே அவருடைய கோபத்துக்கு காரணம்.