கொழும்பு: 2 மாதங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடி வருவதால் இந்தியாவை எங்களால் எளிதாக வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். ஆனால் கொழும்பு வானிலை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யவே ஏசிசி தரப்பில் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் டே சர்ச்சைகள் ஒரு பக்கம் உச்சத்தில் இருக்க, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால் குரூப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சூப்பர் 4 ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், கடந்த இரு மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி வருகிறோம். பாகிஸ்தான் மற்றும் இலங்கை மைதானங்களில் நாங்கள் தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறோம். இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர், ஆஃப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர், லங்கா பிரீமியர் லீக் என்று அனைத்திலும் விளையாடி இருக்கிறோம்.
அதனால் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை உள்ளது. ஆடுகளங்களையும் நன்கு புரிந்துகொண்டுள்ளதால், நிச்சயம் எங்களால் வெல்ல முடியும். ஆசியக் கோப்பை தொடர் ஹைபிரிட் மாடலில் நடக்கவுள்ளது என்பதை அறிந்துகொண்ட பின், பயணத்திற்கான திட்டங்களை செய்துகொண்டோம். வீரர்களின் உடல்நலனில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறோம்.
இதனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு அடுத்தடுத்த நாட்களில் பயணிப்பது கடினமாக இல்லை. வங்கதேச அணிக்கு எதிராக எப்படி விளையாடினோமோ அதே ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட விரும்புகிறோம். அதுதான் எங்களின் திட்டமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.