கொச்சி: மும்பை அணியால் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் கிரீனை 3 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என கருதப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தின் சாம் கரண் மற்றும் ஆஸ்திரேலியா இளம் வீரர் கேமரூன் கிரீன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்புகள் நிலவி வந்தது.
அதற்கேற்ப சுட்டி குழந்தையான சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில், பின்னர் ஏலத்தில் விடப்பட்ட கேமரூனை கிரீனை வாங்க ஏராளமான அணிகள் போட்டிபோட்டன. குறிப்பாக டெல்லி, மும்பை அணிகள் தீவிரம் காட்டின. இருந்தும் மும்பை அணி வாங்கியது.

கேமரூன் கிரீன் சாதனை
ரூ.17.50 கோடிக்கு வாங்கியதன் மூலம் மும்பை அணியால் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய இளம் வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதே மும்பை அணியால் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இருந்தது.

பிரெவிஸ், ஸ்டப்ஸ்?
அதேபோல் மும்பை அணியில் ஏற்கனவே டிவால்ட் பிரெவிஸ், ஸ்டப்ஸ், ஆர்ச்சர், டிம் டேவிட், பெஹ்ரண்டாஃப் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆர்ச்சர், டிம் டேவிட், பெஹ்ரண்டாஃப் ஆகியோரோடு கேமரூன் கிரீன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் அம்பானி பதில்
அதேபோல் பிரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கேமரூன் கிரீனை வாங்கியது குறித்து மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களின் ரேடாரில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.