ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருவதால், எனது பேட்டிங் டெக்னிக்கிற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று விராட் கோலி பேசியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புஜாரா மட்டுமே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனமாக உள்ளார்.

ஏனைய வீரர்களும் அனைவரும் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் சில போட்டிகளில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் அழுத்தம் யாருக்கும் ஒரு போட்டியில் கூட ஓய்வு வழங்கப்படவில்லை. ஆனால் சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் களத்தை பயிற்சி களமாக மாற்றியுள்ளனர்.
முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் ஐபிஎல் தொடரிலும் டெஸ்ட் கிரிக்கெட் லைன் மற்றும் லெந்திலேயே பந்துவீசி வருகின்றனர். அதேபோல் விராட் கோலியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது ஒரு கண் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு பின் விராட் கோலி பேசுகையில், புதிய புதிய ஃபேன்ஸி ஷாட்களை ஆடும் பேட்ஸ்மேன் அல்ல நான்.
நாங்கள் ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் கிரிக்கெட் விளையாடுகிறோம். அதனால் வித்தியாசமான ஷாட்களை விளையாடி, விக்கெட்டை பறிகொடுகக் விரும்பவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் நான் எப்போதுமே என் கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் மீது கவனம் வைத்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.