லண்டன்: அண்மையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. முதல் இரு போட்டிகளை ஆஸ்திரேலிய அணியும், 3 மற்றும் 5 ஆகிய டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து அணியும் வென்றன. 4வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.
ஆஷஸ் தொடர் சமனில் முடிவடைந்ததால், கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 22 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையையும் வெல்ல முடியாமல் ஆஸ்திரேலிய அணி தவித்து வருகிறது. ஒவ்வொரு ஆஷஸ் தொடருக்கு பின்பாகவும், இரு அணி வீரர்களும் ஒன்றாக அமர்ந்து பீர் குடிப்பது, அந்த தொடரின் கலாச்சாரமாக உள்ளது.

கடந்த ஆஷஸ் தொடரில் கூட எவ்வளவு பெரிய தோல்விகளை சந்தித்த போதும், ஆஸ்திரேலிய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களும் ஒன்றாக பீர் குடித்து சிறந்த தொடரின் முடிவை கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியது. ஆனால் இந்த ஆஷஸ் தொடர் முடிவடைந்த நாளில், இரு அணி வீரர்களும் பீர் குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகவே இல்லை.
இதுகுறித்து கேள்வி எழுந்த போது, ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மொயின் அலி ஓய்வை அறிவித்ததால், ஓய்வறையில் இரு அணிகளும் பீர் குடிக்க முடியாமல் போனது. அதனால் நாங்கள் அனைவரும் நைட் கிளப்பில் சந்திப்போம் என்று சர்ச்சைக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முடிவு கட்டினார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், 5வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி என்பதால் நாங்களே இங்கிலாந்து ஓய்வறைக்கு சென்றோம். அப்போது நீண்ட நேரமாக கதவை யாருமே திறக்கவில்லை. பின்னர் பென் ஸ்டோக்ஸ் கதை திறந்து, 10 நிமிடங்கள் என்று கூறினார்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் காத்திருந்து நொந்து போனோம். பின்னர் வந்து நைட் கிளப்பில் சந்திப்பதாக கூறினார்கள். ஆனால் அதற்கும் நான் உட்பட சில வீரர்கள் விமானம் ஏறி வீட்டிற்கே வந்துவிட்டோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய பின் இரு அணிகள் கலாச்சார நிகழ்வாக ஒன்றாக அமர்ந்து பீர் குடிக்காமல் போனது கேவலமான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.