இந்திய வீரர்களுக்கு சிந்தனையில் தெளிவு இல்லை, மனதும் பலவீனம்: கோஹ்லி ஆதங்கம்
கொழும்பு: மனதளவில் பலவீனமடைந்ததுதான் தோல்விக்கு காரணம் என்று இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த அதிர்ச்சி தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
3வது நாளில் இலங்கை தனது 2வது இன்னிங்சில் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், சண்டிமாலின் சதம் உதவியுடன், அந்த அணி 4வது நாளான இன்று இந்தியாவை 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

எங்களைத்தான் சொல்லனும்
இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து கேப்டன் கோஹ்லி கூறியதாவது: நாங்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. எங்களையேத்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்தபோதே, அந்த அணியை சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒரு செஷன் மொத்த போட்டியையும் மாற்றிவிட்டது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.

நல்ல பவுலர்
ஆங்க்லோ மேத்யூஸ் அணிக்கு பெருமை சென்று சேர வேண்டும். ரங்கனா ஹீரத் சிறந்த பவுலர். அவர் இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடியிலேயே வைத்திருந்தார்.

மனதில் பலமில்லை
இந்த போட்டியில் தோற்க, எண்ணத்தில் தெளிவு இல்லாததும், மனதில் பலம் இல்லாததும்தான் காரணம். நெருக்கடியான கட்டங்களில் மனதில் பலம் வேண்டும். அதுதான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு அழகு.

எண்ணத்தில் தெளிவு
இன்றைய தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டியது அவசியம். 170 ரன்களை துரத்திச் சென்றாலும், நமது எண்ணம் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

பார்ட்னர்ஷிப் வேண்டும்
பேசுவது எளிது, ஆனால் செய்வது கஷ்டம். சர்வதேச கிரிக்கெட் வீரரான பிறகு செயல்பாட்டில் அவசியம் கவனத்தை செலுத்த வேண்டும். போட்டியை வென்றெடுக்கும் பார்ட்னர்ஷிப்புகள் தேவை. அது இன்றைய போட்டியில் மிஸ் ஆகிவிட்டது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார். நெருக்கடியான நேரத்தில் தெளிவாக சிந்திக்க கூடியவர் என்று பெயர் பெற்றவர் டோணி. அவர் டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் பெரிய டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்நிலையில் கோஹ்லி இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications