‘பாகிஸ்தான், இலங்கையிடம் இப்டித் தான் தோத்தோம்...’: விளக்கும் புதிய கேப்டன் கோஹ்லி
மிர்புர் : ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் தாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி.
இந்தியா, இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் ஏற்கனவே, இலங்கையிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் கடைசி ஓவரில் இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பு குறைந்துள்ளது.
இலங்கையிடம் தோற்றதற்கு பனியைக் காரணம் காட்டிய இந்திய அணிக் கேப்டன் கோஹ்லி, தற்போது பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியதற்கும் சில காரணங்களை கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மூன்று தவறுகள்...
ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் மூன்று அல்லது நான்கு தவறுகள் செய்கிறோம். அது தான் இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அதிர்ச்சியடையவில்லை...
ஆனால் தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்த ஆட்டத்தில் தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று நம்புகிறேன். இந்த தோல்வியால் நான் அதிர்ச்சி அடையவில்லை.

தவறான கணிப்பு...
சிறிய இலக்கை வைத்துக் கொண்டு எங்களது வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது.அப்ரிடி அதிரடி ஆட்டக்காரர். ஆனால் கேரம் வகை பந்து வீசும் போது, அவர் தவறாக கணித்து விளையாடினால், வெற்றி எங்கள் வசம் வந்து விடும் என்று நினைத்தோம்.

அப்ரிடியே காரணம்...
அஸ்வினும் கடைசி ஓவரை வீசுவதில் ரொம்ப நம்பிக்கையுடன் இருந்தார். இதனால் தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர்குமார், முகமது ஷமியின் ஓவர்களை முன்கூட்டியே முடித்தோம். ஆனால் அப்ரிடி பந்தை எளிதாக எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்து விட்டார்.

சவாலான ஸ்கோர்....
இந்த ஆடுகளத்தில் 260 முதல் 270 ரன்கள் வரை எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்' என இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications