மும்பை: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு மத்திய அரசின் அனுமதி கிரிக்கெட் வாரியத்திற்குத் தேவைப்படுகிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடத்துவதாக உத்தேசித்துள்ள இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்றும் மனோகர் கூறியுள்ளார். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானுடன் டிசம்பர் தொடரில் இந்தியாவால் விளையாட முடியாது. பாகிஸ்தானுடன் விளையாட நமக்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்றார் மனோகர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மனோகரை மும்பை வந்து சந்தித்துப் பேசியிருந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் என்பது நினைவிருக்கலாம்.