கராச்சி: டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே இந்திய அணியை வைத்து உலகக்கோப்பை வென்று கொடுத்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது.
பின்னர் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஜேசன் கில்லஸ்பி நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து கராச்சியில் உள்ள ராணுவ மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் முழு ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா வித்தியாசமான ஒரு கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு வைத்துள்ளார். அதில், வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் பணியாற்றும் போது மொழிப் பிரச்சனை உள்ளது. பயிற்சியாளர்களின் அறிவுரைகளை எங்களுக்கு புரிய வைப்பதற்காக மொழி பெயர்ப்பாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
பயிற்சியாளர்களுடன் சொந்த மொழியில் பேசுவதற்கு எளிதாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவிற்கு இல்லை. அதனை ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எங்களின் ஆட்டம் முன்னேற்றத்தை அடையாத வரை, கடினமான வார்த்தைகளால் வரும் விமர்சனங்களை கேட்டு தான் ஆக வேண்டும்.
தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். கடந்த 13 மாதங்களாக நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதனால் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எப்போதும் ஆங்கிலம் பிரச்சனையாகவே இருந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட இந்தி அல்லது உருது மொழிகளில் தான் பேசி கொள்வார்கள். இன்சமாம் மற்றும் அப்ரிடி ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணியின் கேப்டன்களில் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தருணங்களில் கிண்டல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.