இந்தியாவில் எங்களுக்கு அன்புதான் கிடைக்கும், பாதுகாப்புக்கு பஞ்சமே இல்லை.. பாக். வீரர்கள்
கொல்கத்தா: இந்தியாவில் எப்போதுமே எங்களுக்கு அன்பு மட்டுமே கிடைக்கும். பாதுகாப்பு மிரட்டல் ஒரு போதும் வந்ததில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பு பாகிஸ்தான் வீரர்களை நெகிழச் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தங்களுக்கு எப்போதுமே ஏராளமான அன்புதான் கிடைத்துள்ளதே தவிர ஒருபோதும் மிரட்டல் கிடைத்ததி்ல்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர் கேப்டன் ஷாஹித் அப்ரிதியும், ஆல் ரவுண்டர் சோயப் மாலிக்கும்.

மார்ச் 19ம் தேதி மோதல்
இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரில் மார்ச் 19ம் தேதி கொல்கத்தாவில் மோதவுள்ளன. முன்னதாக இந்தப் போட்டி தரம்சலாவில் நடைபெறுவதாக இருந்தது.

அனுபவித்து ஆடுவோம்
இந்த நிலையில் கேப்டன் அப்ரிதி கூறுகையில், வேறு எந்த நாட்டை விடவும் நான் இந்தியாவில்தான் அனுபவித்து விளையாடுவேன். இங்கு விளையாடுவது போல எங்குமே நாங்கள் ஆடியதில்லை.

இந்தியாவின் அன்பு
எனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உள்ளேன். இந்தியாவுக்கு நான் வந்த இத்தனை காலமும் அன்பு மட்டுமே கிடைத்தது. பாதுகாப்புக்கு மிரட்டலே வந்ததில்லை.

மறக்க மாட்டேன்
இந்த அன்பையும், பண்பையும் நான் மறக்கவே மாட்டேன். இதுபோன்ற அன்பை நாங்கள் பாகிஸ்தானில் கூட பெற்றதில்லை என்றார் அப்ரிதி.

சானியாவின் கணவர் மாலிக்
மூத்த வீரரும், இந்திய டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக் கூறுகையில், இந்திய அரசு சிறப்பாக பாதுகாப்பு அளித்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தியா எனக்குப் புதில்லை
எனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். நான் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளேன். எனக்கு இந்தியா புதிதில்லை. எப்போதுமே இங்கு நான் ஆபத்தை உணர்ந்ததில்லை.

இருவரும் ஒன்றே
பாகிஸ்தானியர்களும், இந்தியர்களும் ஒன்றுதான். பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே ஒரே உணமைத்தான் உண்கிறோம். ஒரே பாஷையைத்தான் பேசுகிறோம். இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார் சோயப் மாலிக்.


Click it and Unblock the Notifications