ஃபுளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் முதல்முறையாக தோல்வியடைந்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முதல்முறையாக இந்திய அணி இழந்திருக்கிறது. உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில் அனுபவ வீரர்கள் பலர் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இப்படி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏறடுத்தியுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலே காரணமாக அமைந்தது. சஞ்சு சாம்சன் சொதப்பினாலும், ஃபார்மில் இருக்கிறார் என்று நம்பப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவும் சொதப்பலான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். இதனால் இந்திய ரசிகர்களிடையே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், பேட்டிங்கில் மொத்தமாக சரிந்துவிட்டோம். எனக்கான பேட்டிங் வாய்ப்பு வரும் போது, ஆட்டம் கைகளை விட்டு சென்றுவிட்டது. அந்த சூழலையும் எங்களால் மாற்றவும் முடியவில்லை. அந்த சுழல் தான் போட்டியின் அனைத்து நிலைகளிலும் இருந்தது என்று நினைக்கிறேன். எங்களை நாங்களே சவாலாக இருக்க விரும்புகிறோம். ஒன்றிரண்டு தொடர்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக இழப்பது பெரிய விஷயமல்ல.
எங்களுக்கு இலக்கு தான் முக்கியம். அதனால் தோல்வி குறித்து பெரிதாக விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எங்கள் அணியில் இருக்கும் வீரர்களை பற்றி நன்றாக தெரியும். எங்களின் பிரச்சனைகளையும் தவறுகளையும் திருத்துவதற்கான நேரம் எங்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். சில நேரங்களில் தோல்வி அடைவதும் நல்லது என்றே நினைக்கிறேன். இந்த தொடர் எங்களுக்கு ஏராளமான படிப்பினைகளை கொடுத்துள்ளது. இளம் வீரர்கள் புதிய முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
எப்போதும் என் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதையே தான் களத்திலும் செய்வேன். தொடர்ந்து வெற்றிக்காக முயற்சிப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் இந்திய அணிக்குள் இளைஞர்கள் வந்து சிறப்பாக திறமையை வெளிப்படுத்துவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்து இந்திய அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.