மிதாலி - ரமேஷ் இடையே சர்ச்சை
மிதாலி ராஜ் முக்கியமான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆடவில்லை. அதன் பின்னணியில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் இருக்கிறார் என மிதாலி குற்றம் சாட்டினார். பதிலுக்கு, ரமேஷ் பவார் மிதாலி சுயநலமாக இருந்தார் என புகார் கூறினார். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த முடிவும் பிசிசிஐ இதுவரை எடுக்கவில்லை.
கடிதம் எழுதினர்
ரமேஷ் பவார் பதவிக் காலம் நவம்பர் இறுதியுடன் முடிவடைந்ததால் இந்த பிரச்சனையை அப்படியே அமுக்க முடிவு செய்த பிசிசிஐ, புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கிய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் ரமேஷ் பவார் மீண்டும் பயிற்சியாளராக வர வேண்டும் என பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மிதாலி ராஜ் மிரட்டினார்.. பிரச்சனை செய்தார்.. சுயநலமாக இருந்தார்.. ரமேஷ் பவார் விளக்கம்!! உண்மையா?
ரமேஷ் பவார் வல்லவர்
இருவரும் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் இது தான். "ரமேஷ் பவார் கடந்த சில மாதங்கள் மட்டுமே மகளிர் கிரிக்கெட்டின் பயிற்சியாளராக இருந்தாலும், மிகப் பெரிய நேர்மறை மாற்றத்தை அணியில் உண்டாக்கியுள்ளார். வீராங்கனைகளின் திறனை வெளிக்கொண்டு வந்து மெருகேற்றியுள்ளார். மீண்டும் புதிய பயிற்சியாளர் வந்தால், நாங்கள் மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும்" என ரமேஷ் பவாரின் திறமை பற்றி உயர்வாக கூறி உள்ளனர்.
பேசுவது அணிக்கு நன்மை
அடுத்து மிதாலி ராஜ் விவகாரம் குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில், எந்த பிரச்சனை என்றாலும், மிதாலி மற்றும் ரமேஷ் பவார் இருவரும் ஒரு குடும்பம் போல எதிர் எதிரே அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது அவர்களுக்கு ,மட்டுமின்றி அணிக்கும் நன்மை என கூறி உள்ளனர்.
இரு பிரிவுகள் இருக்கு
இந்த கடிதத்தின் மூலம் மகளிர் அணிக்குள் உள்ள பிளவு வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, ஹர்மன்ப்ரீத் - மிதாலி இடையே உள்ள உறவு சரியில்லை என்ற பேச்சு உண்டு. இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தில் பிசிசிஐ-குள்ளும் இரண்டு பிரிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ரமேஷ் வரணுமா? கூடாதா?
சிலர் ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர வைக்கவே இப்படி கடிதம் எழுத வைத்துள்ளனர் என கூறுகின்றனர். சிலர் ரமேஷ் பவாரை மீண்டும் உள்ளே வர விடக் கூடாது என மிதாலி ராஜுக்கு ஆதரவான நிலைப்பாடையும் எடுத்துள்ளனர். இந்த சர்ச்சை இப்போதைக்கு முடியாது என்பது மட்டும் தெரிகிறது.
மிதாலி ராஜ் பற்றி பேசறீங்களே.. தோனிக்கு நடந்தது பற்றி தெரியுமா? பிசிசிஐ ரகசியங்கள்