அந்த ஓவர்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்தியாதான் வென்றிருக்கும்.. பெருமூச்சு விடும் ராகுல்
கொல்கத்தா: கூடுதலாக ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீசியிருந்தால், இந்தியா வெற்றிக் கனியை தட்டிப் பறித்திருக்கும் என்று இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையால் அவ்வப்போது ஆட்டத்தில் தடையேற்பட்டதால் முழுமையான போட்டியாக இது அமையவில்லை.
இருப்பினும் நேற்றைய 5வது நாள் ஆட்டத்தின்போது விராட் கோஹ்லி சதம் உதவியோடு, இலங்கை அணிக்கு இந்தியா 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மளமள விக்கெட்டுகள்
இதையடுத்து இலங்கை டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை தொடங்கியபோதிலும், இந்தியாவின் அபார வேகப் பந்து வீச்சால் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது.

ஜஸ்ட் மிஸ்
26.3 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இலங்கை இழந்திருந்தது. ஆனால் மாலையாகிவிட்டதால், வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

சில ஓவர்கள் போதும்
போட்டிக்கு பிறகு இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: கூடுதலாக 5 முதல் 6 ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

இரண்டாவது இன்னிங்ஸ்
எங்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம். இதேபோன்று ஆடுகளத்தில் ஐந்து நாட்கள் ஆட்டம் நடைபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் லோகேஷ் ராகுல். இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் சொதப்பியபோதிலும், 2வது இன்னிங்சில் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்தனர் என்பது சிறப்பு.


Click it and Unblock the Notifications