
நாளை துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நாளை அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தயாராகவும் தீவிரமாகவும் உள்ளன. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2வது இடத்தில் கோலி
இந்நிலையில் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பவுள்ளார் கேப்டன் விராட் கோலி. நேற்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் அவருக்கு பிடித்தமான வடிவமாக டெஸ்ட் போட்டிகள் காணப்படுகின்றன.

அணிக்கு லாங்கர் அறிவுறுத்தல்
இதனிடையே, பகலிரவு போட்டியில் விளையாடும் அவரை விரைவில் அவுட்டாக்க திட்டங்கள் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். அவர் குறித்து பேசுவதை விட்டுவிட்டு அவரை வீழ்த்தும் செயலில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அவர் அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோலியை வீழ்த்தும் அவசியம்
இந்திய அணியின் வீரராகவும் கேப்டனாகவும் விராட் கோலி எவ்வளவு முக்கியமானவர் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அதனால் அவரை விரைவில் வீழ்த்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். திட்டங்கள் தீட்டப்பட்டது மட்டும் போதாது என்றும் அதை செயல்படுத்துவதும் மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிறப்பாக தயாராகும்
ஆஸ்திரேலிய அணி அதிகமான பகலிரவு போட்டிகளை விளையாடியுள்ள போதிலும் சிறப்பான அணியான இந்தியா அந்த போட்டிக்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











