இஸ்லாமாபாத்: எங்களோடு வந்து விளையாடுங்கள் என்று நாங்கள் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி, ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் தான் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 8வது இடத்தில் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் இரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி... அடுத்தக்கட்ட டென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது: எங்கள் அணியுடன் விளையாடுமாறு இந்தியா உட்பட எந்த ஒரு அணியுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது.
சுமூகமான முறையிலேயே இரு நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தானில் வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம். கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளுடன் சுமூக உறவை கொண்டிருக்கிறோம்.
செப்டம்பர் மாதம் இலங்கையுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாட இருக்கிறோம். அதே போன்று, இருநாடுகளின் உறவு வலுப்பெற, இலங்கை பாகிஸ்தான் வந்து விளையாட இருக்கிறது என்றார்.