கைகுலுக்க தடை
கொரோனா வைரஸ் உலக அளவில் அதிகமாக பரவிவரும் நிலையில் விளையாட்டு உலகிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கை குலுக்குவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். இலங்கை பயணத்தின்போது நாங்கள் கை குலுக்க மாட்டோம் மாறாக முஷ்டி மடக்கி லேசாக இடித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
பழக்கங்களை மாற்ற மாட்டோம்
அதேசமயம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தொடர்ந்து கை குலுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா இறங்கியுள்ளது. ஆனாலும் தாங்கள் தங்களது பழக்கங்களை மாற்றப் போவதில்லை என்று ஆஸ்திரேலிய அணியினர் கூறியுள்ளனர்.
மார்ச் 13ல் துவக்கம்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டித் தொடரின்போது வழக்கம் போல தங்களது வீரர்கள் எதிரணி வீரர்களுக்கு கை குலுக்குவார்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். மேலும் டிரஸ்ஸிங் ரூமிலும், வெளியிலும் எப்போதும் போலவே நாங்கள் இருப்போம் என்றும் அதில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றும் லாங்கர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
என்னதான் கை குலுக்கினாலும் தேவையான, போதுமான சானிட்டசைரை பயன்படுத்திக் கொள்வோம். அதன் மூலம் எங்களது ஆரோக்கியமும் காக்கப்படும் என்றும் கூறினார் லாங்கர். ஆஸ்திரேலிய அணியினர் கொரோனாவுக்காக தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறினாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விடவே செய்துள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. மார்ச் 13ம் தேதி சிட்னியில் முதல் போட்டி நடைபெறும். அடுத்த போட்டி 15ம் தேதி நடைபெறும். 3வது போட்டி ஹோபர்ட்டில் மார்ச் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.