கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் 3 மணி நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கொழும்புவில் நன்றாக வெயில் அடித்து வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் கொழும்புவின் வானிலை மோசமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த 3 நாட்களாக கொழும்பு வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடுகளத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மழை ஒருமுறை கூட குறுக்கீடு செய்யவில்லை.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் ஒரே நாளில் நடைபெற்று முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கொழும்புவில் மழை மேகங்கள் இல்லாமல் நன்றாக வெயில் அடித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் எந்த பாதிப்பும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் மழை பெய்யும் என்று பார்க்கப்பட்டதால், ரசிகர்கள் யாரும் டிக்கெட் வாங்க கூட முன் வரவில்லை. இதனால் ஆன்லைனில் கூட இந்தியா - பாகிஸ்தான் டிக்கெட்டுகளை எளிதாக புக் செய்ய முடிகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மழை வராது என்று தெரிய வந்திருப்பதால், ரசிகர்கள் பலரும் டிக்கெட்டுகளை வாங்க மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இதனை இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் உறுதிபடுத்தியுள்ளார்.

வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது என்றால், அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும். ஆனால் மிக முக்கியமான போட்டிக்கு கூட டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.