
இங்கிலாந்து
இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் பெரும் அளவில் மழையினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட 2 நாட்கள் ஆட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் 2 நாட்களுக்கு இடையிடையே குறுக்கிட்டு வந்த நிலையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் 5வது நாளன்று மழை குறுக்கிட்டு மொத்த ஆட்டத்தையும் பாதித்தது.

2வது டெஸ்ட் போட்டி
முதல் போட்டி ஏமாற்றம் கொடுத்ததால் தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் பக்கம் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டிகான வானிலை நிலவரம் தெரியவந்துள்ளது.

வானிலை நிலவரம்
போட்டி நடைபெறும் லண்டன் நகரை பொறுத்தவரையில் 5 நாட்களும் மேக மூட்டத்துடன் தான் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழைக்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. எனினும் ஆட்டத்தின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இங்கிலாந்தில் தற்போது வானிலை அடிக்கடி மாறக்கூடிய ஒன்றாக இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

பிட்ச்
போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகப்படியான புற்கள் இருக்கும்படி பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. பிட்ச் இப்படி இருந்தால், அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக விளங்கும். முதல் டெஸ்ட் போட்டியில் ஓரளவிற்கு புற்கள் இருப்பது போன்று இங்கிலாந்துக்கு சாதகமாக தான் பிட்ச் தயார் செய்யப்பட்டது. ஆனால் அந்த களத்திலும் ரன்களை குவிக்க அந்த அணி தவறிவிட்டது. இதனால் இந்த முறை இன்னும் புற்கள் அதிகமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











