கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது விளையாட்டில் மட்டுமல்ல, அரசியல் உலகத்திலும் பிரதிபலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை நேரில் கண்டு பார்த்த பிறகு வீரர்களை சந்தித்து பேசியது கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி , ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது பிரதமர் மோடி வந்ததால்தான் இந்தியா உலகக் கோப்பை பைனலில் தோல்வியை தழுவியதாக கூறினார்.

இது சலசலப்பை சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிசிசிஐ-யை கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஒட்டுமொத்த நாட்டையும் காவிமயமாக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.v
வீரர்களுக்கு காவி நிறத்தில் ஜெர்சியை வழங்கியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியையும் அவர்கள் காவிமயமாக முயற்சி செய்தார்கள். ஆனால் வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போட்டியில் காவி நிற ஜெர்சி பயன்படுத்தாமல் வெறும் பயிற்சி செய்யும் போது மட்டும் அந்த ஜெர்சி பயன்படுத்தப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டும் கொல்கத்தாவிலோ அல்லது மும்பை வான்கடே மைதானத்திலோ நடந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றது.
ஒரே ஒரு போட்டியில் சில தீயவர்கள் மைதானத்திற்கு வந்ததால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகையான மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிகள் வெற்றிபெறும் போதெல்லாம் பாராட்டு விழாவில் பங்கேற்று பேசியிருக்கிறார்.இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் கிரிக்கெட்டிலும் அரசியல் கலந்து விட்டது குறிப்பிடத்தக்கது.