டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்க களமிறங்கிய மெயர்ஸ் 1 ரன்னிலும், பிராண்டன் கிங் 28 ரன்களும் ஆட்டமிழக்க, சார்லஸ் 1 ரன்னில் வெளியேற, அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானும், கேப்டன் போவேலும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பூரான் 41 ரன்களும், போவெல் 48 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 3 ரன்களிலும், இஷான் கிஷன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். சூர்யகுமார் யாதவும் தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்சர் அடித்தாலும் பெரும்பான்மையான பந்தை அவர் வீணடித்தார். இதனால் திலக் வர்மா மீது அழுத்தம் ஏற்பட்டது. 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 39 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.
சூர்யகுமாரும், திலக் வர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், சஞ்சு சாம்சனும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேசன் ஹோல்டர் வீசிய ஒரே ஓவரில் ஹர்திக் பாண்டியா போல்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாக ஆட்டம் தலைக்கீழ் மாறியது.
இதனையடுத்து அக்சர் பட்டேல் ஒரு சிக்சர் விளாச இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அவர் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்து முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஆர்ஸ்தீப் சிங்கும் 7 பந்தில் 2 பவுண்டரிகளை அடித்து 12 ரன்கள் எடுக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட, இந்திய அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றது.