ஃபுளோரிடா: இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான கடைசி டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தன. இதனால் கடைசி போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை வெல்லும் என்பதால், 5வது டி20 போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மட்டும் 45 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிங் - மேயர்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் மேயர்ஸ் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கிங் - பூரன் இணை சேர்ந்தது.
இதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், சாஹல் என்று எந்த பந்துவீச்சாளர் பந்து வீசினாலும் பந்து பவுண்டரி எல்லையை கடந்துகொண்டே இருந்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 61 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்கள் நிச்சயம் விளாசுவோம் என்று சத்தியம் செய்து வந்தது போல், ஒவ்வொரு ஓவரிலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் 10 ரன்களை விளாசி தள்ளினர்.
குறிப்பாக சாஹல் வீசிய ஓவரில் கிங் சிக்சர் விளாசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே ஆட்டத்தை முடித்துவிடுவார்களோ என்று இந்திய ரசிகர்கள் கலங்கி போயினர். பின்னர் 12.3 ஓவரின் போது மழை பெய்து ஆட்டம் தடையானது. பின்னர் மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில், திலக் வர்மா வீசிய ஓவரில் நிக்கோலஸ் பூரன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஹோப், கிங்கிற்கு உறுதுணையாக ஆடினார்.

சிறப்பாக ஆடிய கிங் அரைசதம் கடந்த பின், சாஹல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி, ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம் திருப்பினார். இந்திய அணியின் தோல்வி உறுதியான நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பந்துவீச அழைத்தார். இறுதியாக 18வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக ஆடிய கிங் 55 பந்துகளில் 85 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.